Thursday 25 August 2016

                                                         


என் உள்ளம் கவர்ந்த அருமைத்தோழர்களே /தோழியர்களே ,

அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தினை உரித்தாக்குகிறேன் .
தமிழ் மாநில மாநாட்டினை கோவையில் மிகசிறப்பாக நடத்திட வேண்டும் என்ற உந்து சக்தி மனதில் தோன்றிய போழ்து இது சாத்தியமா ? நம்மால் இயலுமா என்ற கேள்வியும் எழுந்தது. முடியும் , நம்மாலும் சிறப்பாக,   மிகசிறப்பாக நடத்தி காட்ட முடியும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் இறுதி வரை என்னுடன் சேர்ந்து பணியாற்றி தோளோடு தோளாய் நின்று கண் துஞ்சா பணிமுடித்த கோவை தோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

பல்வேறு வகைகளில் எனக்கு ஆக்கமும் , ஊக்கமும் மற்றும் ஆலோசனைகளையும் வழங்கிய மத்திய மாநில தலைவர்களுக்கு குறிப்பாக தோழர்கள் ராமன் குட்டி, முத்தியாலு, கோபாலகிருஷ்ணன் ராமராவ் மற்றும் பலருக்கும் என் நன்றியினை உரித்தாக்குகின்றேன். செயற்கரிய சாதனைகளை செய்து அவற்றை தம் நா வளத்தால் அரங்கினுள் உலவவிட்ட அத்தனை தலைவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் என் நன்றி. 

இரயிலில், பேருந்துகளில் , சொந்த வாகனங்களில் பயணித்து இரு நாட்களும் இங்கேயே தங்கி மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த அத்தனை தோழர்களுக்கும் தோழியர்களுக்கும் என் நெஞ்சில் எழும் நன்றியறிதலை காணிக்கையாக்குகிறேன்.

சமயம் சம்பந்தமான காரியங்கள் மட்டும் நடைபெற்று வந்த இந்த வரலாற்று சிறப்புமிகு மண்டபத்தை, சங்க மாநாட்டிற்காக  நமக்கு அளித்த ஸ்ரீ அய்யப்ப பூஜா கமிட்டி நிர்வாகிகளுக்கு நன்றி. இம்மன்றம் கிடைத்திட பாடுபட்ட தோழர்களுக்கும் நன்றி.

கோவை நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ மனை KG  ஆஸ்பத்திரியாகும். நம் தோழர் C பழனிச்சாமி அவர்களின் முயற்சியால் டாக்டர் காந்தி மோகன் அவர்கள் தலைமையில் மருத்துவ நிபுணர் குழு வந்திருந்து சுமார் 260 தோழர்களுக்கு BP மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு சம்பந்தப்பட்ட சோதனைகளை இலவசமாக செய்து மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள் . முதியோர் உடல் நலம் காக்க நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய டாக்டர் காந்தி மோகன் அவர்களுக்கும்,  திரு ராஜேஷ் DGM , KG  ஆஸ்பத்திரி அவர்கள் நம் தோழர்கள் எவருக்கேனும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் தம்மை அணுகினால் 20 சதவீதம் மருத்துவ செலவுகளில் தள்ளுபடி செய்வதாக வாக்களித்துள்ளார் .குழுவைச்சார்ந்த அனைவருக்கும் , ஏற்பாடு செய்த தோழர் பழனிச்சாமிக்கும் நம் நெஞ்சுநிறை நன்றியினை தெரிவிக்கிறேன்.

ருசியாக , சூடாக , வகை வகையாக உணவளித்து அவற்றில் அன்பு , அனுசரணை  ஆகியவற்றையும் சேர்த்து இன்முகத்துடன் அறுசுவை உணவை படைத்த சமையற் கலைஞர்களுக்கு எத்தனை முறை நன்றி கூறினாலும் தகும் . எவருக்கும் இல்லை என்று சொல்லாமல் எந்த நேரத்தில் வந்தாலும் முக சுளிப்பின்றி உணவு படைத்தார்கள். அவர்களுக்கு எஞ்சான்றும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன் .

ஒலி , ஒளி , மைக் , ஸ்பீக்கர்ஸ் , அகன்ற திரை நேரடி ஒளி பரப்பு , மீடியா அமைத்துக்கொடுத்த நிறுவனங்களுக்கும்   அரங்கத்தில் தடையில்லா மின் வழங்கிய நிர்வாகம்  ஆகியோருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

மொத்தத்தில் இம்மாநாட்டுப் பணிகளை ஒரு யாகமாக , தவமாக , புனித செயலாக நினைத்து செய்ய நினைத்தோம் செய்து முடித்தோம். எனக்கு பேருதவியாக இருந்த தோழர் சிவக்குமாரன்  . நான் இட்ட பணிகளை இரவு பகல் வெய்யில் மழை என்று பாராமல் தன் சொந்த வேலைபோல் பாவித்து சிறப்புற  செய்து அடுத்த பணிமுடிக்க காத்திருக்கும் சோர்வறியா தொண்டர் அவர் .அவருக்கு என் தனிப்பட்ட நன்றியினை உரித்தாக்குகிறேன். 
                                                 அனைவருக்கும் என் நன்றி ! நன்றி !! நன்றி !!!

தோழமை வாழ்த்துக்களுடன் 
பா அருணாச்சலம் 
தலைவர் , மாநாடு வரவேற்பு குழு ,கோவை 
94430 59011

                                              




.






  

1 comment:

  1. As a delegate and also as a member of Madurai branch I thank sincerely all those who have contributed their services for successfully conducting the Circle conference at Kovai.

    ReplyDelete